அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டுமென்று கூறும்போது இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டுமென்று கேட்பது நகைப்பிற்குரிய கருத்தென வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை அமெரிக்க தூதுவர் வருகை தந்திருந்தார். அவரின் வருகையின் பின்னர் ஊடகங்களை சந்தித்து கலந்துரையாடிய போது, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது என கூறுவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கை யிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
சட்டத்தின் படி அரசியல் கைதிகளின் விடயத்தினைக் கூறுவதாயின், அரசியல் கைதிகளுக்கு பிணை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொது மன்னிப்பு கொடுப்பதென்பது அரசியல் ரீதியான தீர்மானம். ஜே. வி. பி.யின் காலத்தில் கொடூரமான வேலைகளை செய்தவர்களுக்கு கூட பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எமக்கு மட்டும் ஏன் பொது மன்னிப்பு அளிக்கவில்லை என அரசியல்கைதிகள் கேள்வி எழுப்புகின்றார்கள். மற்றவர்கள் கூறும் காரணத்தினைப் பார்த்தால்குற்றம் சாட்டப்படப் போகும் இராணுவத்தினர் அவர்களையும் விடுவிக்க வேண்டுமென்று கேட்கின்றார்கள்.
இவ்வாறான கேள்வி சிரிப்புக்கு இடமான கேள்வி என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் கைதிகள் குற்றவாளிகள் இல்லை என அரசு சொல்லிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசியல் கைதிகளை குற்றவாளிகள் என கருத முடியாது.
அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் அதன் கருத்து தனக்கு விளங்கவில்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.
அரசியல் கைதிகள் இவ்வளவு காலமும் சிறையில் இருந்து வாடுகின்றார்கள். எத்தனையோ பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவர்களை இனி வரப் போகும் குற்றவாளிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசுவது நகைப்பிற்குரிய விடயமாக இருக்கின்றது என்றும் வட மாகாண முதலமைச்சர் மேலும் அங்கு சுட்டிக்காட்டினார்.