
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இத்தாலிய இராணுவத் தளம் மீது இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
தாக்குதலின் போது இத்தாலிய வீரர்கள் அனைவரும் உடனடியாக நிலத்தடிப் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்ததால், நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இர்பில் நகரில் குர்திஷ் பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சியளிக்கும் பணியில் சுமார் 300 இத்தாலிய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.


