
மலையகம் அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்று இரவு விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் ஆகரபத்தனை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
புனர்நிர்மாண பணிகள் நிறைவடைந்து தற்பொழுது பொம்மைகளுக்கு வெளிப்புற பூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்து நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது இனந்தெரியாத குழு ஒன்றின் செயற்பாடு எனவும் ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை குழப்புவதற்கான செயற்பாடு எனவும் மேலும் மத ரீதியிலான முரண்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்ட செயற்பாடாக இதனை கருதுவதாகவும் ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஆக்கரபத்தனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் லிந்துலை பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை ஒன்றும் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.