வடக்கு மாகாண சபைக்கு நிதியை வழங்குவதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் அந்த நிதியை தாமே செலவு செய்கின்றது. இதனை விளங்கிக்கொள்ள முடியாத எமது மக்கள், நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என எம்மிடம் கேட்கின்றனர். இதனால் நாம் மிகவும் மனவருத்தமடைந்துள்ளோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இந்திய றோட்டரிக் கழகங்களால் வாழ்வக மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றபொழுது அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று வழங்கப்பட்டுள்ள உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இறைவன் நல்லவர்களையெல்லாம் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கலந்தே படைத்துள்ளான்.
இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் இருப்பவர் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து வழங்குவதன் மூலமாக நல்லதாக தீர்வை எட்ட முடியும். கையை மடக்காது உள்ளதை எடுத்து உண்ணுங்கள் எனப் பாண்டவர்களும் கௌரவர்களும் இருந்த சபையில் கூறப்பட்டது.
யாருமே உண்ண முடியாதபோது அபிமன்யு கையை நீட்டி உணவை எடுத்து கௌரவர் பக்கத்தில் இருந்த ஒருவருக்கு கொடுத்த பொழுது அனைவரும் உணவை உண்டனர். இதனையே இன்று றோட்டரிக் கழகமும் செய்துள்ளது.
இதற்குப் பெரும் துணையாக இந்தியத் தூதரகம் செயற்பட்டமை பாராட்டுக்குரியது. இந்திய அரசின் திட்டப்படி வடமாகாண சபை நிறுவப்பட்டுள்ள போதிலும் அதற்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இதுபோன்றதொரு நிலையே நிதி விடயத்திலும் காணப்படுகின்றது.
எனவே தொப்புள் கொடி உறவுகளின் உதவியுடன் வேண்டியதைச் செய்து தருவதாக நாம் எமது மக்களுக்கு தெரிவித்து வருகின்றோம். அந்த வகையிலான ஒரு தீர்வே தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்றார்.