பாதிக்கப்பட்ட மக்களுக்கே தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மாகாண சபையும் புலம்பெயர்ந்து வாழுவோரும் தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
போரால் பாதிக்கப்பட்ட மக்களே இயற் கை அனர்த்தங்களினாலும் தொடர்தும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மக்களின் பாதிப்புக்களை கருத்தில் எடுத்து வடமாகாண சபை ஊடாக உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.
மேலும் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்களும் உதவிகளை வழங்க வேண்டும்.
இந்த மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு இங்கு எந்தத் தடையும் இல்லை. எமது மக்களுக்கு நேரடியாகவே உதவிகளை வழங்க முடியும். எனவே உதவிகளை நேரடியாகவே வழங்குவதற்கு புலம்பெயர்ந்தவர்கள் முயற்சிக்க வேண்டும். அந்த உதவிகளை தவறானவர்களிடம் கொடுத்து ஏமாந்துவிடக் கூடாது.
மேலும் இப்பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் பொழுது வீதிகளையும், கால்வாய்களையும் மக்கள் பாதிக்காத வகையில் வெள்ளம் வடிந்தோடக் கூடியதாக அமைத்திருக்க வேண்டும். எமக்குப் பொறியியல் ரீதியான அறிவு இல்லாவிடினும் நாம் அவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்று வெள்ள அனர்த்தங்களைத் தவிர்த்திருக்கலாம்.
அத்துடன் மத்திய, மாகாண அரசுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் பின்னடித்து வருகின்றன. எனவே மக்களின் நலன்களைக் கருத் திற்கொண்டு புலம்பெயர்ந்தவர்கள் உதவிக ளைத் தடையின்றி வழங்க வேண்டும் என் றார்.