பிலிப்பைன்ஸின் கிழக்கு பிராந்தியத்தை ஹகுபிட் சூறாவளி தாக்க ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, தற்போது கடும் காற்றும், மழையுமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புயல் தாக்கும் போது மத்திய பிலிப்பைன்ஸ் தீவான சமர், லெய்டே மாகாணம், தக்லோபன் நகரத்தில் மின்சாரம் தடைபட்டது.
பலமான காற்று சுழற்றி அடிக்கிறது என்றும், தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது என்றும் கிழக்கு சமரில் உள்ள கடற்கரை நகரமான சுலாட்டின் அதிகாரி மாபெல் எவார்டன் தெரிவித்தார்.தற்போது 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. நகரத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஹகுபிட் தரையை தாக்கும்போது அதிக அளவில் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 கி.மீ வேகத்தில வீசிய காற்றுடன் வீசிய புயல் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு சுமார் 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது என்று அந்நாடடின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதேவேளை ஹகுபிட் புயல் நேற்று தாக்கும் என்று உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.இதுபோன்ற அதிக அளவு மக்கள் ஒரு புயலுக்காக வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.