ஈரான் உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனி பலி: ஈரான் அரசு உறுதி!

0
624

மத்திய கிழக்கைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாக, ஈரானின் உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அரசுத் தொலைக்காட்சி சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (28) சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய உக்கிரமான ஏவுகணைத் தாக்குதலின் போது, தெஹ்ரானில் உள்ள தனது இல்லத்தில் அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே கமேனி கொல்லப்பட்டதாக ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் கமேனியின் துல்லியமான இருப்பிடம் கண்டறியப்பட்டு, இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் கமேனியை மாத்திரம் இலக்கு வைக்காமல், அவரது குடும்பத்தினரையும் பலிவாங்கியுள்ளது.

கமேனியின் மகள், மருமகன் மற்றும் அவரது பேரக்குழந்தைகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தகவல்களின்படி, கமேனியின் மருமகளில் ஒருவரும் பலியானவர்களில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து கமேனியின் உடல் மீட்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உச்சத்தலைவரின் மறைவு ஈரானிய மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா எச்சரிக்கை:
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், “படைபலத்தைப் பயன்படுத்துவது பேராபத்தில் முடியும்” என உலக நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் புதிய தலைமைத்துவம் குறித்த எதிர்பார்ப்புகளால் பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here