வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை வடக்கில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண சபை இதுவரை எடுத்த காத்திரமான நடவடிக்கை என்ன? வடக்கு மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் இத்தகைய குடியேற்றத் திட்டங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன்.
வடக்கு மாகாண சபையின் நேற்று (25) முல்லைத்தீவு மாவட்டத்தில் கிவுல் வலயம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றது. இதனை தடுக்கக் கோரி கவனவீர்ப்பு பிரேரணையாக கொண்டு வந்து கருத்துக்களை முன்வைக்கும் போதே இதனை
தெரிவித்தார்.
‘தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்காது சிங்களவர்களுக்கு தாரைவார்த்தால் நாம் மீண்டும் தூக்க வேண்டிய நிலை ஏற்படும். வடக்கு மாகாணத்தில் பல நிலங்களில் திட்டமிட்ட
சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிவுல் ஓயா திட்டம் என்ற போர்வையில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
கிவுல் ஓயா திட்டமானது சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மகாவலி அமைச்சராக இருந்தபோதே அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மிக விரைவாக அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றால் எல்லோரும் இணைந்து திட்டமிட்ட வகையிலேயே செயற்பட்டு வருகின்றனர் என்று தெரிகின்றது’ என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன், ‘‘கடந்த 1970ஆம் ஆண்டளவில் ஆயிரம் ஏக்கர் திட்டம் ஊடாக பத்து தனவந்தர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட கலவரங்களின் இறுதியில் போர்க் கைதிகளான சிங்கள மக்கள் குடி யேற்றப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் பலம் பொருந்தியிருந்தபோது அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தவர்கள் போருக்கு பின்னர் தனிக்கிராமங்களில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர். இது இன்று நேற்று அல்ல. காலம் காலமாக திட்டமிட்டு நடைபெற்றுவரும் குடியேற்றம்.
இந்தப் பகுதிகளில் நடக்கும் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக வன்னியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை-’’ என்றார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் தெரிவிக்கையில், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பதற்கு என பெயரளவிலேயே இலங்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருக்கின்றார். வெறுமனே அரசியல் தீர்வு, இடைக்கால அறிக்கையை வைத்துக் கொண்டு எதோ மாயாஜாலாம், மந்திரம் நடக்கப்போகிறது என கூறி வருகின்றனர்.
ஆனால் இங்கோ எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியாகவே செயற்பட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.
மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இந்த விடயத்தை அரச தலைவர், தலைமை அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.
Home
ஈழச்செய்திகள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மாகாண சபையின் நடவடிக்கை என்ன? பெயரளவிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருக்கின்றார்!