இலங்கை அரசின் சட்டத்தை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்

0
521

தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், இலங்கை அரசு கொண்டு வந்துள்ள கடுமையான புதிய கடல் சட்டத்தை அமல்படுத்தாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள 108 மீனவர்களை விடுதலைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு ஜனவரி 24 ஆம் திகதி கொண்டு வந்துள்ள கடுமையான புதிய சட்டம் குறித்தும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும் தங்கள் கவனத்துக்கு மிகவும் கவலையுடன் கொண்டு வருகிறேன். ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் ஜனவரி 25ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு, அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசின் மீன் வளம் மற்றும் நீர் வளத்துறை சட்டத்தில் 2017இல் தடைசெய்யப்பட்ட மீன்வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது குற்றம் எனச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அந்நிய மீன்பிடி கப்பல் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்று கடந்த 24ஆம் திகதியன்று இலங்கை அரசு அறிமுகம் செய்துள்ளது. கைது செய்யப்படும் மீனவர்களை நீண்ட காலம் சிறையில் வைப்பதற்கும், அதிக அளவில் அபராதத் தொகை வசூலிக்கும் வகையிலும் இந்த சட்டத் திருத்தம் வகை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சில கோடிகளில் அபராத தொகை வசூலிக்கும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் அவர்களுடைய பாரம்பரியமான கடல்பகுதியிலேயே மீன் பிடித்து வருகின்றனர். எனினும், இப்போதைய இலங்கை அரசின் புதிய சட்டம் தமிழக மீனவர்கள் மத்தியில் குறிப்பாக பாக். நீரிணைப் பகுதி மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அந்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்ற உறுதியையும் இலங்கையிடம் இருந்து இந்தியா பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here