முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பறிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி, சரத் பொன்சேகாவின் சிறப்புரிமைகள் அனைத்தும் இன்று அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்தில் வழங்கப்பட்டிருந்த பதவி பட்டங்கள், பதக்கங்கள், ஓய்வூதியம், குடியுரிமை உட்பட அனைத்து சிறப்புரிமைகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பறிக்கப்பட்டன.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டதன் காரணமாக பொன்சேகாவை முன்னாள் ஜனாதிபதி கடுமையான பழிவாங்கலுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இந்நிலையில், பறிக்கப்பட்ட இந்த சிறப்புரிமைகள் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய இன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்காவிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்புரிமைகள் அனைத்தும் அவருக்கு மீளவழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.