
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்விற்கு இம்முறை 5 ஆயிரத்து 985 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இவர்களுள் இல்-து-பிரான்சின் (Île-de-France) தமிழ்ச்சோலைகளிலும், தனியார் பள்ளிகளிலும் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கும் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தோருக்குமான புலன்மொழிவளத் தேர்வுகள் கடந்த மே 02, 03, 10 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்தேறின.
வளர்தமிழ் 1 முதல் 12 வரை விண்ணப்பித்த அனைவருக்குமான எழுத்துத் தேர்வு 06-06-2026 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பரிஸ் மற்றும் இல்து பிரான்ஸ் மாணவர்களுக்கான தமிழ்மொழி எழுத்துத் தேர்வு நாளை 06.06.2026 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாகாணங்களான நீஸ்(Nice), போசோலை (Beau Soleil), போர்தோ (Bordeaux) , முலூஸ் (Mulhouse), ஸ்ராஸ்பேர்க் (Strasbourg), நெவர் (Nevers), துலுஸ் (Toulouse), தூர்(Tours), ஜியான் (Gien), ரென் (Rennes), லியோன்(lyon) ஆகிய தமிழ்ச்சோலைகளுக்கான தேர்வும் அன்றைய தினம் அந்தந்த நகரங்களில் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தத்தேர்வு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் 24ஆவது தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – செய்திப் பிரிவு)


