சுமந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

0
16

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்து பழைய மாணவர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் “எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்” என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது பழைய மாணவர்கள் யாராவதே விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். பாடசாலைக்கு தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது.

சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு தெரியும். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினன் ஆகியோருடன் சுமூகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் “பழைய மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமூகத்துடனேயே நிகழ்வுகளை நடாத்துகிறோம்” என்று அதிபர் கூறினார். அதன்பின்னரே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.

இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழுவானது தெரிவு செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால் அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த ஏற்பாட்டு குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பழைய மாணவர் சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.

நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை. எமது பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது. எமது போராட்டத்தால் யாருக்காவது மனவுளைச்சல் ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. எமது கருத்தினை கேட்காமல் இந்த விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம்.

எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பழைய மாணவர்கள் என்ற வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்தப்பட வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here