சர்வதேச மனித உரிமை தினமாகிய இன்று மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.
வவுனியா பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பித்த இப்பேரணி, வவுனியா நகரில் இருந்து வைரவபுளியங்குளம் வரை ஊர்வலமாக வந்து மனித உரிமைகளை வலியுறுத்தி முத்தையா மண்டபத்தில் மாநாடொன்றை நிகழ்த்தினர்.

காணாமல்போனோரை கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, நவ சம சமாஜக் கட்சி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு, புதிய மாக்சிச லெனின் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசே காணாமல் போனோர் தொடர்பில் பதில் சொல், அரசியல் கைதிகளை விடுதலை செய், இராணுவமே வெளியேறு, காணிகளை விடுதலை செய், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்து, அரசே தமிழ் மக்களுக்கு நீதியைத் தா, தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்து என பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், மாக்சிச லெனின் கட்சியின் தலைவர் செந்தில்வேல், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா உள்ளிட்டோர் உட்பட, காணாமல் போனோர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.