சிட்னி கபே கட்டடத்தில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 5 பேர் அங்கிருந்து தப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9 நியூஸ் நிறுவனத்திற்கு இரண்டு பெண் பிணைக்கைதிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளச்செய்து தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை குறித்த செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகோரியுள்ளதுடன் மேற்குலக நாடுகளுக்கு இது ஆரம்பம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் தீவிரவாதிகளின் செயற்பாட்டினால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 50 பொது மக்களை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் சிறைபிடித்து வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாடியில் ஒரு கறுப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபடும் நபர்களது நோக்கம் இன்னும் தெளிவில்லை என்றும் ஆனால் இது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தனி அரசு போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவளித்து வருகிறது. பொது மக்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டின் அலுவலகமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.