இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 2018-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமகன் விருது பத்மவிபூஷண். இதற்கு முன்னர் இளையராஜாவுக்கு பத்ம பூஷண் விருது 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது.
தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், மதுரையை சேர்ந்த பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் மற்றும் தமிழின் பக்தி இயக்க வரலாற்றை வெளி கொணர்ந்தமைக்காகவும், தமிழ் நாட்டுப்புற பாடல்கள் குறித்த ஆய்வுக்காகவும் விஜயலட்சுமி நவநீதிகிருணனுக்கும், பிளாஸ்டிக் மேன் என அழைக்கப்படும் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு கண்டுபிடிப்புத் துறைக்காகவும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.