ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை மீதான யுத்த குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு பேரவை தீர்மானித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசெய்ன் மற்றும் விசாரணைக்குழுவினர் ஆகியோர் செய்திருந்த பரிந்துரைகளுக்கு
அமைவாகவே மேற்படி அறிக்கை சமர்ப்பிப்பை பிற்போடுவதற்கு மனித உரிமைகள் பேரவை தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்த ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டாம் என்றும் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் நடைபெறும் செப்டெம்பர் மாதம்வரை அதனை ஒத்திவைக்குமாறும் பரிந்துரை செய்திருந்தார்.
அதுமாத்திரமின்றி இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக இந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும். இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட ஒத்துழைப்புக்களும் அறிக்கையில் புதிய தகவல்களை இணைத்துக்கொள்ள சாதகமாக அமையும் என்று கருதுவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுப்பி வைத்துள்ள கடிதம் குறித்தும் குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணையாளர், இலங்கையின் 100 நாள் வேலைத்திட்டத்தில் யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஆராயும் செயற்பாடுகளும் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பான விசாரணை அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு பேரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.