ஈரான் பொருளாதாரத்தை உயர்த்த அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வாக்காளர்கள் அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் அதிபருக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானிக்கும் (68), எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராஹிம் ரைசிக்கும் (56) இடையே நேரடி போட்டி நிலவியது. அதிக அளவில் மக்கள் வாக்குகளை பதிவு செய்ய முன்வந்ததால், சில மணிநேரங்கள் வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி முன்னிலை வகித்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக 2.35 கோடி பேர் (57 சதவீதம்) வாக்களித்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அப்துல்ரெஸா ரஹ்மானி உறுதி செய்தார். எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹிம் ரைசிக்கு (56) 1.58 கோடி பேர் (38.3 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.
இந்த வெற்றி குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்த துணை அதிபர் ஈஷாக் ஜஹான்கிரி, ‘‘ஈரான் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி அளித்த நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு நம்பிக்கையுடன் நடைபோட இந்த வெற்றி வழிவகுக்கும்’’ என்றார்.