இருள் மூடிய எம் தேசத்தில்இமை மூடிய எம் மக்களின்இதயம் கிழித்த இறுதி ஓலங்கள்..!

0
19

அன்று …

இருள் மூடிய எம் தேசத்தில்
இமை மூடிய எம் மக்களின்
இதயம் கிழித்த இறுதி ஓலங்கள்..

காற்றில் கலந்து
காதோரம் எதிரோலித்து
உயிர்களைப் பிதுக்கிய
சாவின் கொடும் வலி!!!

இத்தனை ஆண்டுகள் கடந்தும்
இன்றும் பசும் புண்ணாக
ஆறாமல் வலிக்கிறதே!

ஐயோ! என் செய்வோம்?!

துயராற்றில் மூழ்க வைக்கும்
எம் இனத்தை அழித்தவர் தந்த வலி…
காற்றின் கண்ணீர் திரட்டி வரி வடிக்க..
வரலாற்றைப் படைக்கும் மையாகும் இனி!

இறக்க முடியாத கனதிகளை
இறக்கி வைக்க அல்ல!
…மறக்கவுமல்ல!

இறக்காமல் ..மறக்காமல்..
மண்டியிடாமல்..

மறவர் புகழ் காத்து
மகத்தான தலைவன்
காட்டிய திசை வழி
விடுதலை வாசல் வரை
வலிமை கூட்டக் கூடுகின்றோம்!
வலித்தாலும் வலிகளைச்
சுமக்கின்றோம்!

இதோ ..
பதினேழாம் ஆண்டிலும்
சிவப்பு மஞ்சல் கொடிகள் பறக்க..
எம் தாயவள் மேனி சிவக்க
தம் உறவுகளின் வருகைக்காக
இமை திறந்து காத்திருக்கின்றாள்!!

கோடி நெருப்பைக் கருவேந்திய
முள்ளிவாய்க்கால் மண் அன்னை!
கொடியோர் செயல்களைக் கருவறுக்கும்
வல்லமை தந்து விடை கொடுப்பாள்!

அணியமாவோம்!

இருள் விரட்டும் கதிர்களை
வான் கிழித்து சிறை மீட்க
துணியட்டும் எம் இனம்!

துயர் துடைத்தே நிமிரட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here