பிற்பகல் 14.30 மணியளவில் பாரிசு தலை நகரின் Place de la Bastille பகுதியில் ஆரம்பமாகி Place de la Republique பகுதியில் நிறைவடைந்து அங்கு நினைவேந்தல் நிகழ்வும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன..
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகத் துணைப் பொறுப்பாளர் திரு.பகீரதன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 14.05.2009 அன்று வட்டுவாகலில் தனது கணவர் உட்பட ஐந்து குடும்ப உறவுகளை இழந்த சகோதரி ஒருவர் ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் மண்ணில் தந்தை உட்பட பல உறவுகளை இழந்த சகோதரி ஒருவர் மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து ஒவ்வொருவராக மலர்வணக்கம் செலுத்தியிருந்தமை மெய்சிலிர்க்க வைத்தது..
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவுப்.பொறுப்பாளர் திரு.நிந்துலன் நவநீதன் அவர்களின் தமிழ் மொழியிலான உரையினைத்தொடர்ந்து பிரெஞ்சு மொழி உரையினை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வி சுருதி சுதாகரன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து ஆதிபராசக்தி நடனப் பள்ளி மாணவர்களின் ” முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்” பாடலுக்கான நடனம் இடம்பெற்றது.
பிரான்சின் முக்கிய நகங்களின் நகரபிதா, மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அண்மையில் மாநகர சபைகளுக்குத் தெரிவான தமிழ் உறுப்பினர்களும் அரங்கில் வந்து, தமது சேவையை எமது மக்களுக்கு வழங்குவதுடன் முள்ளிவாய்க்கால் மண்ணின் அவலங்களுக்கு நீதிகிடைக்கத் தம்மாலான ஆதரவை வழங்குவோம் எனவும் உறுதியாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிரெஞ்சு மொழியிலான பேச்சினை திரான்சி தமிழ்ச் சோலை மாணவன் செல்வன் கிறிஸ்டோபர் ஜெனிஸ்ரன் அனிஸ்டன், நியூலி சூ மார்ன் தமிழ்ச் சோலை மாணவி செல்வி சின்னத்தம்பி சிறிநிதா, வில்பன்ந் தமிழ்ச் சோலை மாணவன் செல்வன் கணேசன் ஆகீசன், கிளிச்சி தமிழ்ச் சோலை மாணவி செல்வி அஸ்விதா பவளசிங்கம் மற்றும் ஒள்னே சுபுவா தமிழ்ச் சோலை மாணவி செல்வி மிதுலானா சந்திரசேகரன் ஆகியோர் உணர்வோடு ஆற்றியிருந்தமை பிரெஞ்சு மக்களைத் திரும்பிப்பார்க்க வைத்தது. இதனை அவர்கள் தமது கைபேசியில் காணொளி எடுத்ததையும் காணமுடிந்தது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து வந்த இளைஞரான புவனேஸ்வரன் ரூபன் அவர்கள் கண்ணீரோடு கவிதை ஒன்றை வாசித்தளித்திருந்தார். அது அவருடைய வாழ்வியல் அனுபவமாக அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்திருந்தது.
லாக்கூர்னோவ் தமிழ்ச் சோலை மற்றும் ஒள்னே சுபுவா தமிழ்ச் சோலை மாணவர்கள் இணைந்து வழங்கிய “நந்திக்கடல் அலையே…” பாடலுக்கான நடனம், மிகவும் சிறப்பாக இருந்தது.
நிறைவாக ஒள்னேசுபுவா தமிழ்ச் சோலை மாணவர்களின் நாட்டிய நாடகம் முள்ளிவாய்க்கால் அவலத்தினை கண்முன்னே நிறுத்தியிருந்தது.
பேரணியில் இம்முறையும் கலைஞர்கள் தமது பறையிசைப் பாடல்கள், எழுச்சிப் பாடல்கள் போன்றவற்றோடு, சிறிலங்காவின் கொலைவெறித் தாண்டவத்தினையும் ஆற்றுகை செய்திருந்தனர். இது பிரெஞ்சு மக்களைத் கவர்ந்திழுத்து. அவர்களுக்கான துண்டுப் பிரசுரங்களை தமிழ் பெண்கள் அமைப்பினரும் இளையோர் அமைப்பினரும் வழங்கியதுடன் எமது பேரணியின் நோக்கம்பற்றியும் விளக்கமளித்தனர்
அறிவிப்பாளர்களும் தமிழ், பிரெஞ்சு மொழிகளில் தமது அறிவிப்பின் ஊடாக நிகழ்வின் இறுதிவரை மக்களை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு ஊடகங்களும் இணையத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஊடகவியலாளர்களும், சமூக இணையத்தினரும் ஆர்வத்தோடு தமது கைத்திறனுடைய காணொளிகளையும் ஒளிப்படங்களை யும் உடனுக்குடன் வெளியிட்ட வண்ணம் இருந்தமை நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிறைவாக அனைவருக்கும் நம்பிக்கையை ஊட்டும் பாடலான “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்…” பாடல் ஒலித்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – செய்திப் பிரிவு)


