
பிரான்ஸ் முழுவதும் நேற்று முதல் நாளாகத் தனது உக்கிரத்தைக் காட்டிய நான்காவது ‘கதிர் வெம்மையலை’யைத் (Canicule) தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். ஜிரோண்ட் (Gironde) மாவட்டத்தில் எரிந்து வரும் மாபெரும் காட்டுத்தீயில் சில சிறிய தீப்பொறிகள் மீண்டும் எழுந்தாலும், நல்வாய்ப்பாகப் புதிய பகுதிகளுக்குத் தீ பரவவில்லை. ஆனால், தென்கிழக்குப் பிரான்சின் வார் (Var) மாவட்டத்தில் மீண்டும் ஒரு புதிய காட்டுத்தீ பயங்கரமாக வெடித்துக் கிளம்பியுள்ளது.
வார் மாவட்டத்தின் க்ரோஸ் பெஸியோன் (Gros Bessillon) பகுதியில் தொடர்ந்து எட்டு நாட்களாக எரிந்து 4,500 ஹெக்டேர் நிலப்பரப்பைச் சாம்பலாக்கிய காட்டுத்தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 24 மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள், நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் Brignoles நகரின் புறநகர்ப் பகுதியில் மற்றொரு புதிய தீ மூண்டுள்ளது.
சுமார் 17,000 மக்கள் வசிக்கும் Brignoles நகரின் தென்கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவிய இந்தத் தீயால், அப்பகுதியைச் சேர்ந்த 650 பேர் நள்ளிரவில் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர் . இதில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் Brignoles பொருட்காட்சிக் கூடத்தில் (Hall des expositions) பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என வார் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை இரவு 22:00 மணி நிலவரப்படி, சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்த தாவரங்கள் மற்றும் மரங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்தத் தீயைக் கட்டுப்படுத்தும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஒருவருக்குக் கடுமையான வெப்பத் தாக்கமும் , மற்றொருவருக்குத் தவறி விழுந்ததால் காயமும் ஏற்பட்டுள்ளது.
“தற்போது அப்பகுதியில் காற்று வீசாததால் தீ பரவும் வேகம் சற்றுக் குறைந்துள்ளது; இருப்பினும், தீயின் வீரியம் (Virulent) இன்னமும் தணியவில்லை. நல்வாய்ப்பாக இதுவரை எந்தவொரு வீடும் தீக்கிரையாகவில்லை” என மாவட்ட ஆட்சியர் ஆறுதலான தகவலொன்றையும் பகிர்ந்துள்ளார்.
கதிர் வெம்மையலையின் கொடூரத் தாக்குதலால் பிரான்சின் காடுகள் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க, தீயணைப்பு வீரர்களின் ஓய்வறியாப் போராட்டம் இன்னமும் தொடர்கிறது!


