
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 25.07.2026 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் பாரிஸ் நகரில் Invalides பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு அரசியற்றுறை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்த ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை பாரிஸ் 15 தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.முருகதாஸ் அவர்கள் ஏற்றிவைக்க கறுப்பு யூலை தமிழின அழிப்பில் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்குமான ஈகைச்சுடர் வினை தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சின் துணைப் பொறுப்பாளர் திருமதி தமிழினி அவர்கள் ஏற்றிவைத்தார்.தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தன. நினைவுரைகள் பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெற்றிருந்தன.
வெளிநாட்டவர்கள் பலரும் எமக்கு நடந்த துன்பங்களை ஆவலோடு கேட்டறிந்து கொண்டனர். அவர்களுக்கு பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.
நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுகண்டது.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – செய்திப் பிரிவு)







