
நேற்று நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்விற்கு தோற்றச் செல்லும் எமது மாணவர்ச் செல்வங்களுக்கு RER B போக்குவரத்து குழுமம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
குறித்த தொடருந்துச் சேவையின் நேரத்திரையில் இவ்வாழ்த்து பொதுவான அறிவிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இது எமது தமிழ்ச்சோலைகளின் செயற்பாட்டிற்கும் நமது ஈகையுடனான சேவைக்கும் கிடைத்த பெருமதிப்பாகும். எல்லாவற்றிற்கும் மேலாக எமது தாய்மொழி தமிழிற்கு கிடைத்த பெரும் ஒப்புதலாகும். இந்த RER B தொடருந்தை நாளாந்தம் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – Maison des Examens – ARCUEIL நகரசபை நிர்வாகத்தினருடனான சந்திப்பில் RER B போக்குவரத்து குழுமத்தினரும் ஆண்டுதோறும் பங்குகொண்டு வந்திருந்தாலும் இவ்வாண்டே இவ்வாறான வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. நேற்று RER B பகுதியளவில் சேவையில் இல்லாத போதும் இவ்வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்ட அதேவேளை அதற்கு மாற்றீட்டு வழித்தடமான Metro 4 இல் கூடுதலான தன்னார்வத் தொண்டர்கள் தமிழ்மொழித் தேர்விற்குச் செல்லும் மாணவர்களுக்கான வழிப்படுத்தலுக்காக அமர்த்தப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வரும்பணிக்காக அயராது உழைத்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், தமிழ்ச்சங்கத்தினர், தமிழார்வலர்கள், அனைவருக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.



