
நேபாளத்தையும் திபெத்தையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில் வசித்து வந்த 47 வயதுடைய சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதுடைய ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் மகன்களான 14 வயதுடைய அஸ்வின், 11 வயதுடைய ஆருஷ் ஆகியோர் ஆவர்.
சந்திரசேகரன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து பின்னர் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர் ஆவார்.
இந்த வெள்ளத்தில் சிக்குண்டபோது, சந்திரசேகரன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் இருந்து வந்த யாத்திரிகர்கள் குழுவுடன் இணைந்து, நேபாளத்திலுள்ள ‘கைலாச கூட’ பர்வதத்தை தரிசிக்கச் சென்ற போது இந்த துயரம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குடும்பத்துடன் ‘கைலாச கூட’ பர்வதத்தைத் தரிசிக்க மேலும் 15 இந்தியர்கள் நேபாளத்திற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்திரசேகரன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,000 க்கும் அதிகமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


