
கையூட்டுக் (இலஞ்சம்) குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (04) உத்தரவிட்டார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ நேற்று (04) முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர், ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


