செஞ்சோலை வளாகப் படுகொலை – 20 ஆண்டுகள்: தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை!

0
31

செஞ்சோலை வளாகம் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன் முழு வடிவம் வருமாறு:-

14/08/26
பாரிசு

செஞ்சோலை வளாகப் படுகொலை – 20 ஆண்டுகள்

நினைவிலிருந்து நீதிக்காக – நீதியிலிருந்து மனிதகுலத்தின் பொறுப்புக்கூறலுக்கு

“ஒரு குழந்தையின் உயிர் எந்தப் போரின் விலையாகவும் இருக்க முடியாது. பாடசாலைகள் நம்பிக்கையை உருவாக்கும் இடங்களாக இருக்க வேண்டும்; போரின் இலக்குகளாக அல்ல”

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 அன்று, தமிழர் தாயகமான வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இருபதாவது ஆண்டு நினைவு நாளில், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பாகிய நாம், அந்த இளம் உயிர்களின் நினைவிற்கு எமது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுடனும், உயிர்தப்பியோருடனும், இந்தத் துயரத்தின் பாரத்தை இருபது ஆண்டுகளாகச் சுமந்து வாழும் எமது மக்களுடனும் எமது ஒற்றுமையை மீளுறுதிப்படுத்துகிறோம்.

செஞ்சோலை வளாகப் படுகொலை என்பது ஒரு தனிச்சம்பவமல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற நவாலி தேவாலயக் குண்டுவீச்சு, நாகர்கோவில் மகாவித்தியாலத் தாக்குதல் மற்றும் செம்மணி வெளிப்பாடுகளின் தொடர்ச்சியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற, இந்த, செஞ்சோலை வளாகப் படுகொலை, சிறீ லங்காவில், தமிழர் மீது நீண்டகாலமாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் மேலும் ஒரு அத்தியாயமாக பதிந்துள்ளது. கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொதுமக்கள் வாழ்விடங்கள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றுமே ஆறாத காயங்களாக உள்ளன.

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவிகள், கல்வி கற்று, தமது எதிர்காலத்தையும் தமது சமூகத்தின் எதிர்காலத்தையும் உருவாக்கக் கனவுகண்ட இளம் உயிர்கள். அவர்களின் கனவுகள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் எதிர்கால நம்பிக்கையும் அந்தத் தாக்குதலால் சிதைக்கப்பட்டது. “குழந்தைகளையும் கல்வி நிலையங்களையும் குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் மனிதகுலத்தின் மனசாட்சிக்கும் எதிரானது” என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தப் படுகொலையின் உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை; நீதி நிலைநாட்டப்படவில்லை; பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை.

“உண்மை மறைக்கப்படும் இடத்தில் நல்லிணக்கமும் நிலையான அமைதியும் உருவாக முடியாது”

இந்த நினைவு நாளில், ரஷ்யாவின் பெஸ்லான், பாகிஸ்தானின் பேஷாவர், நைஜீரியாவின் சிபோக், பலஸ்தீனத்தின் காசா, ஈரான் மற்றும் உலகின் பல பகுதிகளில் போர்களாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும், தம் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களையும் நாம் நினைவுகூருகிறோம். எந்த நாட்டைச் சேர்ந்த குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையின் உயிரும் சமமான பெறுமதியுடையது என்பதை மீளுறுதிப்படுத்துவதோடு, குழந்தைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களையும் நாம் உறுதியாகக் கண்டிக்கிறோம்.

இந்த நினைவு நாளில் சர்வதேச சமூகத்திடம் நாம் வலியுறுத்துவது:

  • செஞ்சோலை வளாகப் படுகொலையின் உண்மையை முழுமையாக வெளிக்கொணர சுயாதீனமான மற்றும் நம்பகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் உரிய நிவாரணம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • குழந்தைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் முழுமையாக மதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • உலகின் எந்தக் குழந்தையும் பள்ளிக்குச் சென்றதற்காக உயிரிழக்காத எதிர்காலத்தை உருவாக்க அனைத்துலக சமூகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலகெங்கும் வாழும் தமிழர்களையும், மனித உரிமைகள் மற்றும் நீதியை மதிக்கும் அனைத்து மக்களையும், “செஞ்சோலை வளாகப் படுகொலையின் 20ஆம் ஆண்டு சர்வதேச கையெழுத்து மனு”வில் இணைந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

உண்மை மற்றும் நீதிக்கான எங்கள் கோரிக்கை மௌனமடையாது. உங்கள் நினைவுகளுடன்,
பொறுப்புக்கூறலுக்கான எங்கள் குரல் தொடரும்.

பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு
(Comité des Femmes Tamoules de France)

Translate in french

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here