சுவிசில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழக் கிண்ணம் 2026 போட்டிகள்!

0
37

தமிழர்களுக்கிடையிலான உலகக்கிண்ணம் எனப் போற்றப்படும் தமிழீழக் கிண்ணம் 2026 – தமிழர் விளையாட்டு விழா, கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்தின் வின்ரதூரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பங்கேற்புடன் மிகவும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள், அணிகள், குடும்பங்கள் மற்றும் பார்வையாளர்கள் பெருமளவில் வருகை தந்திருந்த நிலையில், இரண்டு நாட்களும் மைதானம் முழுவதும் விளையாட்டு, பண்பாடு, மொழி மற்றும் தேசிய உணர்வுடன் கூடிய விழாக்கோலம் பூண்டிருந்தது.

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு, குறிபார்த்து சுடுதல் சிறுவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன், பார்வையாளர்களுக்கான பல்வேறு தடகளப் போட்டிகளும் இடம்பெற்றன.

தமிழீழக் கிண்ணம் வெறுமனே ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டுமன்றி, எமது இளைய தலைமுறையினருக்கு மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான விடயங்களை எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான தளமாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக, ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினரையும், அவர்களின் பெற்றோர் மற்றும் மூத்த தலைமுறையினரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைத்த நிகழ்வாக இது அமைந்திருந்தது. பல குடும்பங்கள் தமது பிள்ளைகளுடன் பெருமையுடன் கலந்து கொண்டிருந்தமை, இவ்விழாவின் சமூக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் காலை 8.45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியும் சுவிஸ் கொடியும் ஏற்றப்பட்டதுடன், அகவணக்கமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை கொடி மற்றும் தமிழர் இல்லம் கொடி ஆகியன ஏற்றப்பட்டன. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட பின்னர், விளையாட்டு வீரர்கள் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். இவ்வாறு ஒழுங்கு, மரியாதை மற்றும் விளையாட்டு உணர்வுடன் ஆரம்பமான போட்டிகள் இரண்டு நாட்களும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

மாவீரர் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்த சூரிச் சிற்றி போய்ஸ் விளையாட்டுக் கழகம் களமிறங்கியது.

மின்னொளியில் நடைபெற்ற இவ்விறுதிப் போட்டி ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்து சிறிது நேரத்தில் FC 93 அணியின் வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் ஆட்டம் சூரிச் சிற்றி போய்ஸ் அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஒரு வீரர் குறைவாக இருந்தபோதிலும் FC 93 அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் நிறைவடைந்தபோது இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற்றிருந்ததால் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

மேலதிக நேரத்திலும் எந்த அணியாலும் மேலதிக கோல் பெற முடியாத நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு ஆட்டம் இடம்பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த சமநிலை தவிர்ப்பு ஆட்டத்தில் 8–7 என்ற கோல் கணக்கில் சூரிச் சிற்றி போய்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி, தமிழீழக் கிண்ணத்தை முதன்முறையாகத் தமதாக்கிக் கொண்டது இதன் மூலம் சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் மாவீரர் வெற்றிக்கிண்ணத்தை வென்றிருந்த சூரிச் சிற்றி போய்ஸ், தமிழீழக் கிண்ணத்தையும் முதன்முறையாக வென்று தனது வரலாற்றுச் சாதனையை மேலும் வலுப்படுத்தியது.

தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டில் கைதடி குமரநகர் ஏ அணி வெற்றி

தமிழீழக் கிண்ணம் 2026 இல் இடம்பெற்ற மற்றுமொரு முக்கியமானதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுமான போட்டியாக தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு அமைந்திருந்தது. கிளித்தட்டு போட்டியின் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கைதடி குமரநகர் ஏ பிரிவு அணியும், சுவிஸ் நண்பர்கள் அணியும் பலத்த போட்டியுடன் களமிறங்கின ஆரம்பம் முதலே இரு அணிகளும் தமது திறமையையும் விளையாட்டு நுட்பத்தையும் வெளிப்படுத்திய நிலையில், பார்வையாளர்களின் உற்சாகத்துக்கு மத்தியில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது

இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைதடி குமரநகர் ஏ அணி வெற்றி பெற்று தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.

கிளித்தட்டு போன்ற எமது பாரம்பரிய விளையாட்டை ஐரோப்பிய மண்ணில் அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி, அதன் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை தொடர்ந்து பேணுவதற்கான ஒரு சிறந்த தளமாகவும் தமிழீழக் கிண்ணம் அமைந்திருந்தது.

இறுதியாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியீட்டிய அணிகள் மற்றும்வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் வளர்ந்தோர் வரையிலான பல்வேறு வயதுப் பிரிவினரும் ஆர்வத்துடன் பங்கேற்றமை, இவ்விழாவின் பரந்துபட்ட மக்கள் பங்கேற்பை வெளிப்படுத்தியது.

இரண்டு நாட்களாகவும் விளையாட்டு, பண்பாடு, மொழி மற்றும் தேசிய உணர்வுடன் சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணம் 2026, இறுதியில் தமிழீழ தேசியக் கொடி இறக்கப்பட்டதுடன் உணர்வுபூர்வமாக நிறைவுபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, பல தலைமுறையினரையும் சந்திக்கச் செய்து, விளையாட்டின் ஊடாக எமது மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் அடையாளத்தை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான நிகழ்வாக தமிழீழக் கிண்ணம் 2026 அமைந்திருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் ஒன்றிணைத்து, போட்டி உணர்வுடன் கூடிய விளையாட்டை முன்னெடுத்ததுடன், உலகத் தமிழர்களின் ஒற்றுமையையும், எமது பாரம்பரிய விளையாட்டுகளின் பெருமையையும் வெளிப்படுத்திய ஒரு சர்வதேச விளையாட்டு விழாவாக தமிழீழக் கிண்ணம் 2026 தனது தடத்தைப் பதித்துள்ளது.

இவ்விழா எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளையும், பல தலைமுறைகளையும் இணைத்து, தமிழர்களின் விளையாட்டு மற்றும் பண்பாட்டு அடையாளத்தை உலக அரங்கில் தொடர்ந்து வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக வளர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக்குழு

தமிழீழக்கிண்ணம் 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here