பிரான்சில் சிறப்புற இடம் பெற்ற பொங்கல் விழா!

0
1041


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நடாத்திய பொங்கல் விழா வெகு சிறப்பாக பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவிறியில் இடம் பெற்றது.
இன்று (14) காலை 11 மணிக்கு பொங்கலிடலுடன் பொங்கல் விழா ஆரம்பமாகியது. பொங்கலிடலின்போது இவிறி நகரசபை முதல்வர் தமிழர் பண்பாட்டு உடையுடன் பொங்கலிடலில் பங்குபற்றிச் சிறப்பித்தார்.


பொங்கலிடலின் பின்னர் இவிறி சூரசன் நகரபிதா திரு Bouyssou Philippe அவர்களும் வல்துமான் பிராந்திய துணை தலைவர் திருமதி Kirouani Lamya அவர்களும் மங்கல இசையுடன் மண்டபத்திற்குள் அழைத்துவரப் பட்டார்கள்.
வரவேற்பு விளக்கினை  மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரும், மகளீ அணிப் பொறுப்பாளரும் ஏற்றி வைத்தனர்.

 


மங்களவிளக்கினை இவிறி சூரசன் நகரபிதா திரு Bouyssou Philippe அவர்களும் வல்துமான் பிராந்திய துணை தலைவர் திருமதி Kirouani Lamya மற்றும் தமிழர் பிரதிநிதிகள் ஏற்றிவைக்க மண்டப நிகழ்வுகள் ஆரம்பமாகின.


மங்கள இசையுடன் நிகழ்வுகள் ஆரம்ப மாகின, தொடர்ந்து நடனம், வில்லுப்பாட்டு, கவியரங்கம், இசையரங்கம், மாணவர்களால் வழங்கப்பட்டன.
மாணவரகளால் நடத்தப்பட்ட காத்வராயன் கூத்து மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
தொடர்ந்து வெளிவாரி பட்டதாரிமாணவர்களின் பட்டி மன்றமும் இடம் பெற்றது.


சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு ப. பாலசுந்தரம் ஆற்றியிருந்தார். அவர் தனதுரையில்,
தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர்கள். எந்த சமயத்தையும் முன்நிறுத்தி வாழ்ந்தவர்கள் அல்ல. தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்தபடியால் தான் அவர்களின் கலைகளும் வளர்ந்திருக்கின்றன. எமது கலைகளையோ, பண்பாடுகளையோ மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்கப்படல் வேண்டும். பிள்ளைகளின் கலைவெளிப்பாடுகளை உற்சாகப்படுத்தி வளர்கவேண்டியது எமது கடமையாகும்.
தை திருநாளை அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலம் தமிழரின் திருநாளை அங்கீகரித்து , அதைத் தொடர்ந்து அமெரிகா ஜோர்ஜியா மாநிலம் ஜனவரி 8 ம் திகதியிலிருந்து 12 ம் திகதிவரை தமிழரின் பண்பாட்டு கலாச்சார வாரமாகப் பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அதே வேளை கனடா பிரதமர் தமிழரின் தைப் பொங்கலைப் பெருமைப் படுத்தியுள்ளதுடன், இரண்டாவது மொழியாக தமிழ் மொழியை கற்கின்ற வாய்ப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இவைகள் சர்வதேச ரீதியில் எங்களால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள். இந்த நாடுகளில் அவர்களின் செயற்பாடுகளில் எம்மை இணைத்தக் கொள்வதுதான் எங்களுக்கான அங்கீகாரத்தை தந்து நிற்கின்றது. எதிர்வரும் காலங்களில் இவ்விடயங்களை உள்ளடக்கி இளையோர்கள் ஒவ்வொருபகுதிகளிலும் தமிழர்களுக்கு அங்கீகாரங்களைப் பெற்றுக் கொண்டு எமது விடுதலையை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாங்கள் அனைவரும் பணிசெய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இப்படியான நிகழ்வுகளின் மூலம் தான் இவர்களுடன் உறவை பேணமுடிகிறது. இன்றை நிகழ்விலும் மாநகர முதல்வர் எங்கள் உடையை அணிந்து நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உள்வாங்கி செயற்பட்டார். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் செயற்படுத்த இருக்கின்றோம். அவைகள் தான் எமது விடுதலையை முன்நகர்த்தும் என்பது வெளிப்படை. இதேவேளை தாயகத்தின் மீது பார்வை செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.  பொங்கல் நிகழ்ச்சி என்பது பொங்கிவிட்டுப் போவதல்ல. பொங்கல் நிகழ்வு என்பது எமது வாழ்வுடன் இணைந்து விட்ட நிகழ்வாகவே பார்க்கப் படுகின்றது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here