பிரான்சில் மனித உரிமைச் சதுக்கம் முன்பாக கறுப்பு யூலை கவனயீர்ப்பு!

0
270

சிறிலங்கா இனவெறிக் காடையர்களினால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 34 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சின் பாரிசில் உள்ள மனித உரிமை நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள Trocadéro பகுதியில் இன்று (23.07.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.30 மணியளவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு கறுப்பு உடையணிந்து மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கறுப்பு உடையணிந்து முகத்தினை கறுப்புத் துணிகளால் மூடியிருந்ததுடன், பிரெஞ்சு மொழியில் வெளிநாட்டவர்களுக்கு எமது கவனயீர்ப்பின் நோக்கம் பற்றி விளக்கமளித்திருந்தனர்.
பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் பலரும் எமது மக்கள் சிறிலங்கா அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கேட்டறிந்து தமது ஆதங்கங்களைத் தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், இவ்வாறான தொடர்போராட்டங்களின் மூலமே எமது விடுதலையின் இலக்கை எட்டமுடியும். வெளிநாட்டவர்கள் எமது போராட்டத்தின் நோக்கத்தினை அறிந்துகொள்வதே எமது வெற்றியாகும். 2008 ஆம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் கூறியதுபோல இங்கு இளையோர் போராட்டத்தை முன்னெடுத்து நிற்பதைக் காணமுடிகின்றது. இதுவே எமது போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். தொடர்ச்சியாக இளையோர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் கவனயீர்ப்பு அமைதியாக நிறைவடைந்தது.
(ஊடகப்பிரிவு- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here