“மேதகு” பாகம்-1 , 2 திரைப்பட இளம் இசையமைப்பாளர் சாவடைந்தார்!

0
49

“மேதகு” பாகம்-1 மற்றும் 2 திரைக்காவியங்களுக்கு சிறப்பாக இசையமைத்துக்கொடுத்து… உலகத்தமிழர்களின் செவிகளுக்கு தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றுச்செய்தியை தனது மெல்லிசையால் கடத்திய எங்கள் பாசமிகு தம்பி பிரவீன்குமார்(வயது28) உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார்.

இளம் வயதில் மிகச்சிறப்பாக இசையமைக்கும் திறமையை வளர்த்துக்கொண்டு, குறுகிய காலத்தில் பல்வேறு வாய்ப்புகளை பெற்றவர் தம்பி பிரவீன். அவரது முயற்சிகளுக்கு பங்களிக்கும் வகையில் “மேதகு திரைக்களம்” சார்பில் அவருக்காக தஞ்சையில் இசையகம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. மென்மேலும் பல உயரங்களை தொடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் அவரது இந்த திடீர் மறைவு அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021-ஆம் ஆண்டு கிட்டு இயக்கத்தில் வெளியான படம் ‘மேதகு’. லிசி ஆண்டனி, வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பிரவீன்குமார். இப்படத்தைத் தொடர்ந்து ‘மேதகு 2’, ‘ராக்கதன்’, ‘கக்கன்’ உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரவீன்குமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அண்மையில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், கடந்த மே.02 வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் உயிரிழந்தார். பிரவீன் குமாரின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here