நிசா புயலுக்குப் பின்னர் மீண்டும் ஒரு வெள்ளம் யாழ்.குடாநாட்டு மக்களை ஆக்கிரமித்துக் கொண்டது.
கரையோரப்பகுதிகள் முதல் தாழ்நிலப்பகுதிகள் வரை நீரில் மூழ்கின. சில கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் வெள்ளத்தால் உருக்குலைந்து போனது.
விடாது பெய்த அடைமழையால் செய்வதறியாது திக்குத் திணறிப் போனர்கள். மழை வேண்டும் என்று கொடும்பாவி எரித்தவர்களுக்கு மழை வேண்டாம் என்று கொடும்பாவி எரிக்க வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்து விட்டான் வர்ணபகவன்.
மாடி வீடுகள் முதல் ஓலைக் கொட்டில்கள் வரை எல்லா இடங்களிலும் வெள்ளம். ஆனால் ஓலைக் கொட்டிலில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் மழையின் கொடுமை. ஒவ்வொரு இடமாக ஒழுக ஆரம்பிக்கும் முதலில் ஒழுகும் இடங்களில் வீட்டிலுள்ள பாத்திரங்களை வைத்து சமாளிக்கலாம்.
சிலவேளைகளில் மழை அதிகமாக பெய்யத் தொடங்கினால், எல்லா பாத்திரங்களும் வைக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இரவில் மழை பெய்தால் சொல்லவே தேவையில்லை. காரணம் நித்திரை கொள்ள இடமே இருக்காது. மழை நீர் வீடு முழுவதும் ஆக்கிரமித்து விடும்.
நின்று கொண்டே நித்திரை கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டு சென்று சென்றுள்ளாள். பொம்மைவெளி, காக்கைதீவு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி மாற்றிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
இடம்பெயர்ந்த மக்கள் வாழுகின்ற முகாம் மக்களையும் மீண்டும் இடம்பெயர வைத்துள்ளது மழை வெள்ளம். அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் உள்ள 18 குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சேந்தாங்களம் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அதனை அண்மித்துள்ள வலித்தூண்டல் பகுதி மக்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள ஜே 219 அளவெட்டி தெற்கு முகாமில் உள்ள 17 குடும்பங்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து இடம்பெயர்ந்து அளவெட்டி தெற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலையில் தஞ்சம் புகுந்தன.
தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக அந்தப் பாடசாலையிலிருந்தும் இடம்பெயர்ந்து அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
வலி.வடக்கின் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கோணப்புலம்,சபாபதிபிள்ளை, கண்கணி முகாம்களில் முற்று முழுதாக மழைவெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இதனால் 460வது குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
மேலும் காரைநகர், களபூமி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 250 மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
நேற்று முன்தினம் வரை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அந்தப் பகுதியும் வெள்ளத்தில் முழ்கியதன் காரணமாக அருகிலுள்ள சுந்தரமூர்த்தி ஆரம்பப் பாடசாலையில் தங்கியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமனதுடன் உதவுவதற்கு இதுவரை யாருமே முன்வரவில்லை என்பது இன்னொரு கவலைக்குரிய விடயமே. மழை ஏழைகளின் அன்றாட வாழ்க்கையினை சீர்குலைத்துவிட்டது என்று தான் கூறவேண்டும்.மழை விட்டும் தூவானம் விடாதது போல போர் அழிவிலிருந்து மீண்டு வரும் மக்களை வெள்ள அழிவுகள் துரத்தி வருகின்றன
S.தமிழன்