தற்போது நிலவும் கொரோனாப் பேரிடர் சூழலுக்கு மத்தியிலும் ஆயிரம் பேர்வரை முருகதாசன் திடலிற்குள் மாத்திரம் கலந்து கொள்வதற்கான காவல்துறையின் அனுமதி பெறப்பட்டு, சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி ஜெனிவா ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 20.09.2021 திங்கட்கிழமை 14.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதும் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தியாக தீபம் திலீபன் மற்றும் ஈகிகளின் திருஉருவப் படங்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலரின் உணர்வுப் பேச்சுக்கள் இடம்பெற்ற அதேவேளை மனித நேய ஈருருளிப் பயணத்தில் கலந்து கொண்ட உணர்வாளர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.
சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் பல்வேறு நாடுகளில் இருந்தும் இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு எமக்கு நீதிவேண்டும் என்று உணர்வுக் குரல் எழுப்பினர்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்த பின்னர், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.