மண்டைதீவில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான 25 ஏக்கர் தோட்டக் காணிகளை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திங்கட்கிழமை பொதுமக்களின் அழைப்பின் பேரில் மண்டைதீவுக்கு சென்ற வேளை மக்கள் வேண்டுகோளை முன்வைத்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இராணுவம் வடக்கில் ஆக்கிரமித்திருக்கும் மக்களின் காணிகளை விடுவித்து வருகின்றது.
இந்நிலையில் மண்டைதீவிலும் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது மக்கள் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-
மண்டைதீவு முத்துமாரி அம்மன் கோவிலை அண்டிய பகுதயில் கடற்கரைக்கு அண்மையாக பொதுமக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் செம்பாட்டு தோட்டக் காணிகளும், 7 ஏக்கர் கடற்கரை காணிகளுமாக பொதுமக்களின் 25 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியை சுவீகரிப்பதற்கான பிரிவு 2 பிரசுரம் வெளியாகியிருந்தது.
இதையடுத்து இந்தக் காணிகளை தம்மிடமே தருமாறு கோரி 20 காணி உரிமையாளர்கள் கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலருக்கு கடிதங்களை எழுதி காணிகளுக்கான உறுதிகளின் பிரதிகளையும் இணைத்து அனுப்பியிருந்தனர். இதற்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து கடற்படையிடமிருந்து எமது காணிகளை விடுவித்துத் தாருங்கள் என மக்கள் கேட்டனர்.
இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருடன் பேசி குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் காணி ஆக்கிரமிப்பு விடயத்தில் மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் எந்த காரணத்துக்காகவும் காணிகளை விட்டுக் கொடுக்க வேண்டாம்.