இலங்கையில் நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமானதும் நீதியுமான அரசியல் தீர்வொன்றைப் பெறுவது குறித்து இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரிக் தலைமையிலான குழுவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் வௌியிடப்படவுள்ள இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் குறித்த விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம் அதிகூடிய தாக்கம் செலுத்தும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
இலங்கை ஆறு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரிக் நேற்றைய தினம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் காலை 7.30க்குச் சந்தித்தார்.
சுமார் ஒரு மணி 15நிமிடம் வரை நீடித்த இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இச்சந்திப்பு குறித்து கருத்து வௌியிடுகையில்,
ஐ.நா விசேட பிரதிநிதியுடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது. விசேடமாக நாம் நீண்டகாலமாக இங்கு காணப்படும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நீதியாதுமான தீர்வொன்று எட்டப்படவேண்டும் என்பது குறித்து ஆராய்ந்திருந்தோம்.
இப்பிரதிநிதி விசேடமாக பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள் உருவாகாமல் உத்தரவாதப்படுத்தல் ஆகிய விடயங்களை நேரில் ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஆகவே அவ்விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக இவருடைய தற்போதைய விஜயமானது எதிர்வரும் செப்டம்பவர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையினால் வௌியிடப்படவுள்ள இலங்கை குறித்த விசாரணை அறிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.
இச்சந்திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்,
ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதியுடன் எமது சந்திப்பானது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அவருடனான சந்திப்பின் போது காணிப்பிரச்சினைகள், அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம், யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில் தமிழர் பகுதிகளில் இராணுவ பிரசன்னம் உட்பட தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அவை தொடர்பாக அவர் கூடிய அவதானத்துடன் செவிமடுத்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் எனவும் அவரிடத்தில் நாம் வலியுறுத்தினோம் என்றார்.
ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பப்லே கிரிக்குக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்றை தினம் காலை இடம்பெறுவதாக இருந்தபோதும் திடீரென நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு நேற்று காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாக நேற்று முன்தினம் ஐ.நா விசேட பிரதிநிதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்ததுடன் முதலமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.