சுவிசில் நடைபெற்ற லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும் மாமனிதர் சந்திரநேரு மற்றும் ஈகைப்பேரொளிகள் அனைவரினதும் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் தீயில் கருவான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார், ஈகைப்பேரொளி முருகதாசன், தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி, ஈகைப்பேரொளி செந்தில்குமரன் உட்பட 25 வீரத்தமிழ் ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.03.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ரர்த்தூரில் எழுச்சியுடன் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் வழங்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான வின்ரர்த்தூர் வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள் மற்றும் காலத்தின் தேவை கருதிய சிறப்புரையோடு கவிதைகளும் இடம்பெற்றதுடன் எமது இனத்தின் தமிழ்மொழி மேன்மைக்காக உழைத்த மாமனிதர் திரு. இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் மறைவையொட்டி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் விடுக்கப்பட்ட இரங்கல் செய்தியும் கலந்து கொண்ட உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.