இலங்கை ஒப்புக் கொண்டு, ஏற்றுக்கொண்ட ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தவில்லை. இலங்கை அரசை ஐ.நா. தலைமையிலான பன்னாட்டுச் சட்டப் பொறிமுறைக்குள் முற்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் வடக்கு மாகாண சபை கோரியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினர் மாகாணசபையின் நேற்றைய அமர்வில் கொண்டுவந்தார். வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அதை வழிமொழிந்தார். உறுப்பினர்கள் அனைவரது ஆதரவுடன் இந்தத் தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அனுப்பப்படவுள்ளன.
2015ஆம் ஆண்டு செப்ரெம்பரில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் முதலியவற்றை ஊக்கப்படுத்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியது.
மனித உரிமைகள் மற்றும் பன்னாட்டு மனித நேயச் சட்டங்களையும் மீறுதல் மற்றும் துர்நடத்தை செய்தது தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென பன்னாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் அடங்கலான பக்கச் சார்பற்ற சட்டநெறி பொறியமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான கடப்பாட்டு நிலைக்குள் இலங்கை தன்னை உட்படுத்தி கொண்டது. ஆனால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கத் தவறி விட்டது.
இலங்கை அரச தலைவர், தலைமை அமைச்சர் மற்றும் முதுநிலை உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி உள்ளனர்.
ஒரு சமத்துவமான அரசியல் தீர்வை கண்டு கொள்வதற்கான விசுவாசமான நடவடிக்கையை மேற்கொள்வதிலிருந்து அரசு தவறியுள்ளது. சிங்கள அரசினுடைய ஒடுக்கு முறை மனப்போக்கை எடுத்துக்காட்டும் விதத்திலே, தமிழ் மக்கள் உள்ளிட்ட பௌத்தர்கள் அல்லாத மக்கள் அனைவரும் பௌத்த மதத்தினுடைய முதன்மை நிலையை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இப்போதும் வலியுறுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையானது தானே ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபைத் தீர்மாத்தை நடைமுறைப்படுத்த இயலாமல் அல்லது விரும்பாமல் இருப்பதால் இந்தச் சபையானது இதனை ஐ.நா.வின் தலைமையிலான ஒரு பன்னாட்டு சட்ட நெறிப் பொறியமைப்புக்கு முற்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொள்கிறது.
உண்மை நீதி மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வு இல்லாமல் இலங்கையிலே நல்லிணக்கமோ அல்லது நிரந்தரமான சமாதானமோ சாத்தியமில்லை என்று இந்தச் சபை நம்புகின்றது.
2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கை மீதான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது போல் ரோம் சட்டத்தை அங்கீகரிக்க இலங்கையை வற்புறுத்தும்படி ஐ.நா.வையும் பன்னாட்டுச் சமூகத்தையும் சபை கோருகிறது.
தமிழ் மக்கள் இலங்கையில் இணைந்த வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் தமது மரபு வழி தாயகத்தை கொண்டிருக்கும் ஒரு மக்கள் இனம் என்பதையும் அவர்கள் சுய நிர்ணய உரிமைகள் கொண்டவர்கள் என்பதையும் கண்டுணர்ந்திருக்கும் இந்தச் சபையானது ஒரு அரசியல் தீர்வுக்காக இணக்க நடுவராக செயற்படும் படி பன்னாட்டு சமூகத்தை அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை கோருகின்றோம்.- என்று தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது ..