எமது நாடுகளிலிருந்தே பல கலை வடிவங்கள் பிறநாட்டா ரால் திருடிச் செல்லப்பட்டு இன்று அவர்களின் நாட்டுக் கலைவடிவங்களாக அவை எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.
உள்நாட்டு மருத்துவமும் பிறநாட்டவரால் அபகரித்துச் செல்லப்படுவதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னர் இதை அறியாது பறிகொடுத்தோம். இப்போது பணத்துக்காக அறிந்தும் பறிகொடுக்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சித்த மருத்துவ அலகும், வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும், இந்தியாவின் ஆயுஸ் அமைப்பும் இணைந்து நடத்தும் பன்னாட்டு ஆய்வு மாநாடும், கண்காட்சியும் கைதடியில் நடைபெறுகின்றது. அதில் நேற்று(25) கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவித்ததாவது:
சித்த மருத்துவம் என்பது முழுக்க முழுக்க மூலிகைகளாலும் மூலிகைக் குணமுடைய மரப்பட்டைகளாலும், சுகாதாரத்துக்கு உதவக்கூடிய சரக்கு வகைகள் எண்ணெய் போன்றவற்றால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் ஆற்றப்படுகின்ற வைத்திய முறையாகும்.
இந்த வைத்திய முறைமை இற்றைக்கு பல நூற்றாண்டுக ளுக்கு முன்னர் மேலை நாட்டு ஆங்கிலேய வைத்திய முறைமைகள் எமது மண்ணில் அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்துள்ளது.
ஆங்கில வைத்திய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கியதும் மக்களுக்கு குடிநீர்களில், குளிகைகள், பத்திய உணவு வகைகளைப் பின்பற்றும் செயற்பாடுகளில் ஆர்வம் குன்றத் தொடங்கியது.
புதிய முறையின் இலகு தன்மையை மக்கள் விரும்பியதாலும், உடனடி நிவாரணியாக இந்த இரசாயனக் கலவைகள் பயன்பட்டதாலும், எமது பாரம்பரிய சித்த வைத்திய முறைமைகளைக் கைவிட்டு மேலைத்தேய வைத்திய முறைமைகளை எமது மக்கள் பின்பற்றத் தொடங்கினர்.
நாம் அறிந்துகொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத எமது வைத்திய முறைகளின் பக்கவிளைவற்ற, உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத வைத்திய முறைகளை நன்கு புரிந்துகொண்ட மேலைநாட்டவர்கள் தமது தீராத நோய்களுக்கான வைத்திய உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியா போன்ற நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அவர்களின் நாட்டில் கிடைத்த இரசாயனக் கலவைகளை குளிகைகளாகவும், மருந்துக் கலவைகளாகவும் எமக்கு அனுப்பிவிட்டு தமது தேவைக்கு எமது நாட்டை நோக்கி மூலிகை மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரத்தொடங்கினர்.
சித்த மருத்துவத்தின் அண்மைக்கால வளர்ச்சி பல நூற்றுக் கணக்கான மாணவர்களை சித்த மருத்துவத் துறையில் உள் நுழைப்பதற்கும் மருத்துவக் கற்கை நெறிகளை சிறப்பாக நிறைவேற்றி மருத்துவ சேவையில் ஈடுபடவும் வழிவகுத்துள்ளது. அது எமது பாரம்பரிய வைத்திய முறைமைக்கு கிடைக்கப் பெற்ற ஒரு அங்கீகாரம் எனத் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.
ஆனால் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், சித்தாயுர்வேத வைத்தியம் என்று எமது சுதேச வைத்திய முறைகள் பங்கு போடப்பட்டு போட்டி பொறாமைகளுடன் வளர்ந்து வருவதைக்கண்டு மனவருத்தப்படுகின்றேன்.
எமது வைத்திய முறைமைகள் பற்றி மேலும் மேலும் ஆராயுங்கள். அவற்றின் பாவனையை முடிந்த அளவு இலகுபடுத்துங்கள். எமது வருங்கால சந்ததியினர் எதுவித பக்க விளைவுமற்ற, உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய சுதேச மருத்துவ உதவியுடன் தொற்று நோய், தொற்றா நோய்த் தாக்கங்களில் இருந்து விடுபட்டு ஒரு ஆரோக்கியமான சமூகமாக வளர்ந்து, வாழ்ந்து வர வாழ்த்துகின்றேன்–என்றார்.
Home
ஈழச்செய்திகள் உள்நாட்டு மருத்துவமும் பிறநாட்டவரால் அபகரித்துச் செல்லப்படுவதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்!