தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பன்னாட்டுச் சமூகம் இனியும் தாமதிக்கக் கூடாது!

0
120


பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பன்னாட்டுச் சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிடும் வாராந்த கேள்வி, பதில் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
கேள்வி – ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில் – 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/1 என்ற பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதன் கீழ் இலங்கை அரசுக்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசு இருந்து வந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலை மாறுகாலநீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது.
இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். பன்னாட்டுச் சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமானமுறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசு அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டவரைவு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை ஆண்டுகள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம்.
நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசு அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம். இந்த நிலையில் பன்னாட்டுச் சமூகம் என்ன செய்யப்போகின்றது? பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பன்னாட்டுச் சமூகம் இனியும் தாமதிக்கக் கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால், ஐ.நா. மீண்டும் இரு ஆண்டுகள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.
எமது பெரும்பான்மையின அரசு நெருக்குதல் இல்லாவிட்டால் ஒருபோதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசு முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசுகள் உண்டுபண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலம் கடந்தால் ‘ஆறிய கஞ்சி பழங்கஞ்சி’ ஆகிவிடும்.
பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த பன்னாட்டு மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் செயலர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here