இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காக அதன் மீது உலக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையிலான (அதாவது பன்னாட்டு நீதி விசாரணை போன்ற ஒன்று) தெரிவுகள் உட்பட மாற்று வழிகளை உலக நாடுகள் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் .
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் சிறீலங்கா அரசையும் பங்காளியாகக் கொண்டு 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபைத் தீர்மானம் 30/1ஐ நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு சிறீலங்காவுக்கு மேலும் 2 ஆண்டு கால அவகாசம் கடந்த ஆண்டில் வழங்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பான தனது இடைக்கால அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று ஜெனீவாவில் முன்வைத்தார்.
2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தி 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆணையாளரின் இடைக்கால அறிக்கை சபையின் இந்த அமர்வில் முன்வைக்கப்படவேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. அதன்படி அறிக்கை நேற்று சபையில் முன்வைக்கப்பட்டது.
10 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலமை, நிலைமாறு கால நீதி தொடர்பில் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் கொழும்பின் செயற்பாடுகள் என்பன அறிக்கையிடப்பட்டுள்ளன.
அறிக்கையின் பெரும் பகுதி தீர்மானத்தை நிறைவேற்றும் கடப்பாட்டில் இருந்து சிறீலங்கா விலகியிருப்பதை விளக்கிக் கூறுவதாக உள்ளது. அதேநேரத்தில் இடம்பெற்றுள்ள மிகச் சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அறிக்கை பாராட்டியுள்ளது.
அறிக்கையின் இறுதியில் ஆணையாளர் தெரிவித்துள்ள முடிவுகளும் பரிந்துரைகளும் என்ற பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2015ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடனும் ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான பொறிமுறையுடனும் இலங்கை அரசு காத்திரமாகத் தொடர்புபட்டிருப்பதை ஆணையாளர் வரவேற்றகிறார். ஐ.நா. மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய இலக்குகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றுவதன் ஊடாக இந்தக் காத்திரமான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறவேண்டும்.
இதனை 2017ஆம் ஆண்டிலும் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக முடங்கிப்போய்விட்டன.
இருந்திருந்து விட்டு மேற்கொள்ளப்படும் மிகச் சில நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் போதுமானவையல்ல, தெளிவற்றவையும் கூட. அத்தோடு ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்க உருவாக்கப்பட்ட கட்டமைப்பு திடமானதாக இல்லை என்பதுடன் அது முன்னோக்கி நகர்வதற்குத் தேவையான அரசியல் ஆதரவும் அதற்குக் கிடைக்கவில்லை.
பொறுப்புக்கூறல் மற்றும் மறுசீரமைப்பு ஆகிய விடயங்களில் காணப்படும் போதாமைகளை தொடர்பான தனது கரிசனையை, கவலையை ஆணையாளர் 2015ஆம் ஆண்டு முதல் தனது அறிக்கைகளில் வலியுறுத்தி வந்தாலும் நாட்டின் மனித உரிமைகள் விடயத்தில் பொதுவாக ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பார்த்து ஊக்கமடைந்திருந்தார்.
ஆனால், 2017ஆம் ஆண்டு இனங்களிடையே அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டதுடனும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுடனும் கடந்துள்ளது. இது ஆணையாளரின் ஊக்கத்தை முற்றாகச் சிதைத்துவிட்டது.
கவலைப்படுத்தும் இத்தகைய சம்பவங்களில் பலவற்றையும் சாதகமான திசை நோக்கித் திருப்பி சிறீலங்கா அரசு சமாளித்துவிட்டாலும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு ஒருமுறை மிதமிஞ்சிய வன்முறைகளால் பாதிக்கப்படும் நாட்டில் இதுபோன்ற வன்முறைகள் பிரச்சினைக்குரியவையையே. அதிலும் குறிப்பாக வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள், சமூக வலைத்தளங்கள் ஊடான உணர்வுக் கிளர்வுகள், அரசியல் திரிபுபடுத்தல்கள் என்பவையும் சேரும்போது இது மிகவும் சிக்கலுக்குரியதே.
சித்திரவதைகள், கண்காணிப்புக்கள் தொடர்பாகத் தொடரும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டத்தைக் கொண்டு வருவது, அந்தச் சட்டத்தின் கீழான தடுத்து வைப்புகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில் காணப்படும் போதாமைகள் ஆகியன அரசின் முக்கிய மறுசீரமைப்புக் முயற்சிகளுக்கு விரோதியாகக் காணப்படுகின்றன.
அந்த முயற்சிகளுக்கான முக்கியமான விடயங்களாகவும் இவை காணப்படுகின்றன. எனவே சிறீலங்கா பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் சபை தொடர்ந்தும் ஒரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று ஆணையாளர் கோருகின்றார்.
அத்தோடு பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் உலகச் சட்டங்களின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட வேறு வழிவகைகள் குறித்தும் சபையின் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டும்- என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.