அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வாளர் இருவரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் 1ஆம் குறுக்கு வீதிப் பகுதியில் கடந்த 22.10.2017 அன்று , 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக காவல் துறையினரால் கொள்ளப்பட்டு பின்னர் காவல் துறை மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வினர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. சந்தேகநபர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப்பட்டனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்வதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.