மானிப்பாய் வீதி, ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 29.11.2017 மாலை ஆறு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் பகுதியிலிருந்து உடுவிலுள்ள தனது வீட்டுக்கு குறித்த சிறுவன் பெண்கள் செலுத்தும் ஸ்கூட்டி வகையை சேர்ந்த மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திக் கொண்டு சென்றபோது பிரதான வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்த பெண்னொருவர் குறுக்கு வீதிக்கு திடீரென திரும்பியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த பெண்ணின் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு அச்சிறுவன் மரணமடைந்துள்ளார். மரணமான உதயசூரியன் வீதி, உடுவில் பகுதியை சேர்ந்த அடம்ஸ் நீல்சன் லியனாடோ அலோசியஸ் என்ற 17 வயதுடைய மாணவன் மானிப்பாய் பகுதியிலுள்ள சர்வதேச ஆங்கிலப் பாடசாலையொன்றில் உயர்தர பிரிவில் கல்வி கற்று வருகிறார். கல்வியிலும் விளையாட்டிலும் திறமையான இவருடைய மரணம் அப்பகுதி மக்களிடையே சோக நிலையை தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை இவ்விபத்தில் படுகாயமடைந்த புதுமடம், உடுவில் தெற்கு மானிப்பாயை சேர்ந்த 33 வயதுடைய அமிர்தரஞ்சினி சுரேந்திரன் என்ற பெண் தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் 24 ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்.