மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் வரட்சியின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட ஒருங் கிணைப்புக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. நடப்பு வருடத்தில் மன்னார்
மாவட்டத்தில் நிலவிவரும் வரட்சியின் காரணமாக சிறுபோகம் மற்றும் மேட்டுநிலப் பயிர்செய்கைகளை மன்னார் மாவட்ட விவசாயிகள் கைவிட்டுள்ளனர். மேலும் இப்பகுதியிலுள்ள பெரும்பான்மையான கிணறுகளும் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றன
இந் நிலையில் கால்நடைகளுக்கும் குடிநீர் இன்றி பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றன
அத்துடன் நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களும் தங்களின் நாளாந்த தேவைகளுக்கான குடிநீருக்கு அவதிப்பட்டு வருவதைத் தொடர்ந்து பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நரிக்காடு, பரிகாரிகண்டல், பொன்தீவுகண்டல், உமக்கிரி, வாழ்க்கைப்பெற்றான்கண்டல், இழகப்பிட்டி, அச்சங்குளம் ஆகிய கிராமங்களுக்கும்
முசலி பிரதேச செயலகப் பிரிவில் அரிப்பு, பாழைக்குழி, மறிச்சிக்கட்டி, கரடிக்குழி, வெள்ளிமைல, காயக்குழி, முள்ளிக்குளம், கொக்குப்படையான் ஆகிய கிராமங்களுக்கு கடந்த ஏப்பிரல் மாதம் தொடக்கம் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
இவற்றில் நானாட்டான் பகுதிக்கு 60 குடும்பங்களுக்கு இரண்டு நாளைக்கு ஒரு முறை 18 ஆயிரம் லீற்றர் நீர் வழங்கப்பட்டு வருவதாகவும்
முசலி பிரதேசப் பகுதிக்கு 1100 குடும்பங்களுக்கு நாளாந்தம் 27 ஆயிரம் லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், மடு பிரதேச செயலகப் பிரிவில் தம்பனைக்குளம், கட்டையடம்பன், பூமலர்ந்தான், தேக்கம், குஞ்சுக்குளம், பண்ணைவெட்டுவான் ஆகிய கிராமங்களுக்கு இரண்டு நாளைக்கு ஒருமுறை 18 ஆயிரம் லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது