ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் தொடருந்து (எண்: 12677) நேற்று காலை தடம் புரண்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் 87 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு தொடருந்து காலை 6.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டது.
தமிழகத்தின் ஓசூர் அருகே உள்ள கர்நாடகா பகுதியான ஆனைக்கல் என்ற இடத்தில் காலை 7.33 மணியளவில் வந்த இந்த தொடருந்து திடீரென விபத்துக்குள்ளது.
இதில் தொடருந்தின் D8, D9 உட்பட மொத்தம் 9 பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெட்டிகள் ஒன்றோடு ஒன்று பலமாக மோதின. இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
87 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்த 70 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தமிழக, கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இரு மாநிலங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் அங்கு முகாமிட்டனர். அரக்கோணம் மற்றும் பெங்களூரில் இருந்து தேசிய பேரிடம் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
பாறாங்கல் காரணமா? முதலில் தொடருந்து தடம் புரண்டதற்கு இன்ஜினில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில், ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த பாறங்கல் மோதியதால் விபத்து நடந்ததாக தெரிவித்துள்ளார்.
தொடருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க போலீசாரோ, மீட்புக்குழுவினரோ உடனடியாக வரவில்லை, 2 மணிநேரம் கழித்து தாமதமாகவே வந்தனர் என்று விபத்தில் சிக்கிய பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கண்மூடி திறக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த விபத்து ஒரு கொடுமையான அனுபவம் என்றும் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான தொடருந்தில் பயணித்த ரோஷினி ஹரிஹரன்(27) தனது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பெங்களூருவில் இருந்து கிளம்பிய அந்த இன்டர்சிட்டி ரயிலில் கோயமுத்தூருக்கு பயணித்துக் கொண்டிருந்திருந்தேன். சிறிய தூக்கம், இனிமையான இசை என சென்று கொண்டிருந்தது அந்த பயணம். ஆனால் இப்படி ஒரு விபத்து நேரிடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. குண்டு வெடித்தது போல பெரிய சப்தம் கேட்டது. நிலைமையை உணரும் முன்னரே எல்லாம் முடிந்திருந்தன.
கண்ணை மூடிக்கொண்டேன். சற்று நேரம் கழித்த போது உயிரோடு இருப்பதை உணர்ந்தேன். நான் இருந்த டி9 பெட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
புகைப்படலம் லேசாக விலகியபோது ஆங்காங்கே சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் தலை நசுங்கி இறந்து கிடந்தான. ஒரு பெண் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்”
“காயத்தின் வலியில் ஏராளமானவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். விபத்து காலை 7.35 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், காலை 9 மணி வரை சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகளோ, மீட்புக் குழுவினரோ வரவில்லை.
ஒன்றரை மணி நேரமாக சக பயணிகள் சிலர் உதவியாலும், அப்பகுதி மக்கள் உதவியாலுமே பயணிகள் சிலர் மீட்கப்பட்டனர்” என்றார் அதிர்ச்சி விலகாத ரோஷினி.
தானும் உள்ளே சிக்கிக் கொண்டிருந்தலும், ரோஷினி சக பயணிகளை தேற்றியிருக்கிறார். புகை மண்டலத்தைப் பார்த்து பெட்டியில் சிக்கியிருந்த பயணிகள் தீ பிடித்திருப்பதாக அலறியபோது, “தீ பிடிக்கவில்லை, தொடருந்து தடம் புரண்டதால் ஏற்பட்டுள்ள புகைப்படலமே” என ஆறுதல் கூறியதாகவும் ரோஷினி தெரிவித்துள்ளார்.
நான் உட்பட பலர் காயங்களின்றி தப்பியது ஒரு அற்புதம். நான் இன்று சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பியுள்ளேன்” “பெங்களூரு – எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்தில் பயணித்தவர்களுக்கு இது ஒரு கருப்பு வெள்ளி” என்றும் ரோஷினி கூறியுள்ளார்.
[mom_video type=”youtube” id=”/Kpkb6gHV8h0″]