மக்களின் நிலை என்றுமே கேள்விக்குறியாகவே எஞ்சி நிற்கின்றன!

0
520

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சித்திரை புதுவருட த்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ,
எமக்கு பல நன்மைகளை பெற்றுத்தந்த துர்முகி வருடத்தை அன்புடன் வழிஅனுப்பி புதிதாக பிறக்கவிருக்கும் ஏவிளம்பி வருடத்தை மகிழ்வுடன் வரவேற்கும் இச் சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.
வருடங்கள் பல வந்து போனாலும் தமிழ் மக்களின் நிலை என்றுமே கேள்விக்குறியாகவே எஞ்சி நிற்கின்றன. உறவுகளைத் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், வீடுகள் நிலங்களை இழந்தவர்களின் சோகக் கதைகள், வேலையற்ற பட்டதாரிகளின் ஏக்கப் பெருமூச்சு என இன்னோரன்ன துன்பங்களுக்கு மத்தியில் பிறக்கவிருக்கும் இப்புத்தாண்டில் எமது துன்ப துயரங்கள் எம்மை விட்டு அகலவும் சிறையில் அடைக்கப்பட்ட எமது இளைஞர்கள் தமது உறவுகளுடன் இணைந்து கொள்ளவும் விவசாயிகளின், மீனவர்களின், வணிகர்களின் தொழில் முயற்சிகள் மேம்படவும் இப்புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இப் புத்தாண்டை வருக வருக என வரவேற்போமாக.
இப் புதிய ஆண்டில் எம்மிடையே காணப்படுகின்ற காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கான ஒரு புதிய யுகத்தை படைக்க பாடுபடவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சக்கூடிய வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வடமாகாணத்தை முன்னேற்றுகின்ற ஒரே சிந்தனையுடன் செயற்படுவதற்கு இப்புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இப் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் சுக வாழ்வையும் மன அமைதியையும் வழங்க வேண்டும் என வாழ்த்தி எனது வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here