கிழக்கில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நாளை மட்டு. நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவுள்ளார்.
தமிழ்மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள கிழக்கில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியானது வடக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடந்தது போன்று மட்டு. நகரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பேரினவாத அரசாங் கங்களால் தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக ஏவப்பட்டு வரும் இன அடக்கு முறைகளுக்கு எதிராக இப்பேரணியின் முடிவில் பிரகட னம் வெளியிடப்படவுள்ளது.
உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைப் பலியெடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட தமிழின அடக்கு முறைகள் இலங்கையில் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
அதேவேளை ஐ.நாவில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவும் அரசு பல சதி வேலைகளை முன்னெடுத்து வருகிறது.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாக நாடகமாடி நிரந்தரப் பிளவை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
எனவே சிறுபான்மை இனங் களின் இருப்பைக் கேள்விக்குள் ளாக்கும் அரசின் செயற்பாடுகளை இல்லாமல் செய்யவும் சிங்கள பேரினவாத அரச படைகளால் இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராகவும் தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி ஓரணியில் திரண்டு எமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதன் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
வடக்கில் எழுச்சிப் பேரணி ஏற்படுத்திய அரசுக்கு எதிரான அலையைப் போன்று கிழக்கிலிருந்து பேரினவாத அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
கிழக்கில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் வர்த்தக சங்கங்கள் ஆதரவளித்துள்ள அதேவேளை பேரணியில் அணி திரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.
எழுக தமிழ் எழுச்சிப் பேரணியானது சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை உலகறியச் செய்யும் ஒரே நோக்குடன் நடத்தப்படுவதால் மாணவர்கள் மற்றும் கல்விப்புலம் சார்ந்தோர் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவளித்து பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.