
பெரும்பான்மை இன சிங்கள சிரேஷ்ட மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகைதராத காரணத்தால் அந்த பீடத்தின் முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத் தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் நடை பெற்ற அவசர சந்திப்பில் தமிழ், முஸ்லிம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என துணைவேந்தர் கூறியிருந்த நிலையில், அச்சம் காரணமாக தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பல்கலைக்கழக நிகழ்வொன்றுக்காக குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் கடந்த 22ஆம் திகதி இரவு 7.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சிங்கள சிரேஷ்ட மாணவ குழுவினரால் கனிஷ்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
தலைக்கவசம், தடிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த நான்கு மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
ஏனைய மாணவர்களுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்த தாக்குதல் குறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
கனிஷ்ட தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்ற போதிலும் அது குறித்த தகவல்கள் பெரிதாக வெளியில் வெளிவருவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.