சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தாம் தவறு செய்திருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, எனக்கு அரசியல் வாழ்வை மக்கள் தான் கொடுத்தார்கள். மக்கள் இல்லை என்றால் 1993இல் என் அரசியல் வாழ்வு அழிந்து போயிருக்கும். என்னிடத்தில் என்ன குறைகள் என அமைதியாக யோசிக்கும்போது, அவற்றை நான் உணர்கிறேன். அதற்கு என்ன காரணம் என்பதையும் நான் அறிகிறேன் என மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், கட்சி முன்னேற வேண்டும் என்பதைத் தவிர எந்த சிந்தனையும் எனக்கு கிடையாது. நம் குறைகளை சுட்டிக்காட்டி பெரிதுபடுத்திய பத்திரிகைகளோ, ஊடகங்களோ, ஊர் ஊராக வெயிலில், மழையில் நடந்து, உடல் நலிவுற்று ரோட்டின் ஓரத்தில் கட்டாந்தரையில் துண்டை விரித்துப் படுத்துக் கிடந்ததை நினைத்து பார்க்கக் கூடவில்லை.
ஒன்றே முக்கால் ஆண்டு சிறையில் இருந்தபோது நான் கவனமாக இருந்தேன். மக்கள் தலை குனிந்துவிடக் கூடாது என்பதற்காக மிகக் கவனமாக இருந்து வந்தேன். பிணையில்கூட வராமல் இருந்தது மக்களின் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். அப்படி எல்லாம் கவனமாக இருந்தும் இந்த முறை என் மீது பழிச்சொல் வந்திருக்கிறது.
அ.தி.மு.க.விடம் இருந்து 1,500 கோடி வைகோ வாங்கியிருக்கிறார் எனச் சொல்லும்போது, அக்கிரமமாக போட்டிருக்கிறார்கள் என அலட்சியப்படுத்தி விட்டேன். அதைப் பொருட்படுத்த ஆரம்பித்தால் அது மிகப்பெரிய செய்தியாகும் என மனதளவில் நினைத்து அதை தவிர்த்தேன். இதற்கு நான் முக்கியத்துவம் கொடுத்து பதிலளித்தால், கேள்விதான் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மனதில் பதியும். பதில் நிற்காது என எண்ணினேன்.
அடுத்து என்னைப் பற்றி முடிவெடுக்கும் பிரச்சினையில், நானாக யாரையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது ஒரு தவறு தான். நான் போட்டியிட மாட்டேன் என்ற செய்தியை நானாக எடுத்திருக்க கூடாது. என்னைக் குறித்து நான் முடிவெடுக்கும்போது அது தவறாக முடிகிறது என்றார்.