
நல்லூர் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் தாயாரின் அழுகை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்துவிட்டு காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கும் பல பெண்களையும் அவதானிக்க முடிந்தது. எச்சரிப்புகளையும் மீறி விலையுயர்ந்த நகைகளை அணிந்து வருவோர், தங்கள் சொத்துகளை இழந்து தவிப்பதோடு ஏனைய பக்தர்களின் மன நிம்மதியையும் இல்லாமல் செய்கிறார்கள் என அடியவர் ஒருவர் தெரிவித்தார்.
நல்லூரான் தேர்த் திருவிழாவான இன்று முன் வாசலடியில் தாலிக்கொடியை திருடனிடம் பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறுள்ளார். இவரின் நிலையைப் பார்த்து பலரும் கண்கலங்கினர்.
இவ்வாறு பல பெண்கள் தங்கள் விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர்.

விலையுயர்ந்த நகைகளை அணிந்து வர வேண்டாம் என எத்தனையோ தடவைகள் கோயில் நிர்வாகம், காவல்துறையினர், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் என தொடர்ந்தும் விழிப்புணர்வூட்டியும் பக்த கோடிகள் கேட்பதாயில்லை.
இன்றைய தினம் விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்த பெண்களிடம் காவல்துறையினர் நேரடியாகவே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியதை காணக் கூடியதாக இருந்தது.
எல்லாவற்றையும் மீறி அணிந்து வந்து பின் பறிபோய்விட்டது என கதறி அழுவது உங்களை மட்டுமல்ல சுற்றி இருப்பவர்களையும் மன நெருக்கடிக்குள்ளாக்கும்.
முருகனை மெய்யன்போடு தரிசிக்க விரும்பும் அடியவர்கள் அனைவரும் தயவு செய்து பக்தர்கள் அதிகம் திரளும் இவ்வாறான சப்பறம், தேர், தீர்த்தம் போன்ற திருவிழாக்களில் மட்டுமாவது விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்து வருவதனைத் தவிருங்கள்.


