
கனத்த வாரமிது.
…………………………
கனத்த வாரமிது
கண்ணீர் கரைபுரண்டு
நினைவுகள்
நெருப்பாகும் நேரமிது.
இனம்
உயிரழிந்த காட்சிகளை உலகமே
உறக்கமின்றி
பார்த்தும் உதவிக் கரம் நீட்டாத
வேதனையின் வாரமது.
வெள்ளைக்
கொடிகள் கூட செங்குருதியால்
சிவந்து போனது.
வெள்ளைச் சீருடை அணிந்த
பிள்ளைகளின்
கனவுகள் கூட சிதறுண்ட நாளது.
சிங்களத்தின்
அரக்கத் தாண்டவத்தில் அர்த்தமின்றி
எரிந்தது தமிழரின் உயிர்கள்.
இனவழிப்பின்
உயிர்க் குகையில் ஒற்றை
இனமொன்று
ஒலியின்றி கரைந்தது.
ஒன்பது
நாடுகள் ஒதுங்கிப் பார்த்த வேளையில்
முள்ளிவாய்க்காலில் முற்றுகைப்
பரப்பில்
பாதி இனம் புதைந்தது மீதம்
இருந்த
உயிர்கள் திசையறியாது
தீக்காற்றில் பறந்தன.
காலமும்
கைகட்டியே நின்றது
கை எடுத்து கும்பிட்ட சாமிகளின்
சிலைகள் கூட
முகமூடி அணிந்திருந்தன.
ஆனாலும்
முள்ளிவாய்க்கால் முடிவின் பெயரல்ல
மெளனத்தில் முளைக்கும்
மறுமலர்ச்சியின் விதை.
விடுதலையின்
வேட்கையை வேரறுக்க முடியாது.
நினைவுகளின்
நெருப்பில் நாம் இன்னும் உயிருடன்.
ஒன்றாவோம் உறுதியாவோம்
வென்றெடுக்கும்
வரலாற்றை மீண்டும் எழுதுவோம் வாரீர்.
தயாநிதி தம்பையா
பிரான்ஸ்
12.05.26


