
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republic (Paris) பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழத் தேசியக்கொடிகளைக் கைகளில் ஏந்திய தமிழீழ மக்களும் உணர்வாளர்களும் சிங்கள பெளத்த பேரினவாதம் தொடர்ந்தும் 77 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் அனைத்து வழிகளிலும் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்திய படங்கள் மற்றும் பிரெஞ்சு மொழியிலான சுலோகங்களையும் தாங்கிய ஊர்தியோடு பேரணியில் உணர்வோடு கலந்துகொண்டனர்.
இதேவேளை வழமைபோன்று பல்லினமக்களும் தமது கோரிக்கைகள் அடங்கிய விடயங்களை பல்வேறு கலை வடிவங்களில் ஆற்றுகைப்படுத்தியதையும் காணமுடிந்தது.
எமது தமிழ் இளையோரும் தமிழீழத்தேசியக்கொடிகளை ஏந்தியவாறு உணர்வோடு அவர்களுக்கு மத்தியில் குரல் எழுப்பியிருந்தனர்.
தமிழீழ எழுச்சி கானங்கள் பல்லின மக்களையும் உணர்வு பொங்கவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இம்முறையும் கடும் வெய்யிலுக்கு மத்தியில் இடம்பெற்ற இப்பேரணிக்கு பிரெஞ்சுக் காவல்துறையினர் வழமைபோன்று கடும் பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.
மாலை 17.00 மணியளவில் பேரணியானது Voltaire பகுதியை சென்றடைந்தது. அங்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களின் தமிழ் மொழியிலான உரை, தமிழீழ மக்கள் பேரவைப்பொறுப்பாளர் திரு.திருச்சோதி, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இளையோர் அமைப்பு பொறுப்பாளர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களின் பிரெஞ்சு மொழி உரைகளும் இடம்பெற்றிருந்தன. பேரணிகுறித்து உரையாற்றியிருந்த நிர்வாகப் பொறுப்பாளர் எதிர்வரும் மே 18 பேரணியில் நாம் கலந்துகொள்ளவேண்டியது எமது தார்மீகப் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.. தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் மேதின ஊர்வலம் நிறைவடைந்தது.
(எரிமலை செய்திப் பிரிவு)
https://www.facebook.com/share/p/14bSeFYeXLy மேலதிக படங்கள் காணொளிகள் எமது முகநூல் பக்கத்தில்


