தாயகத்தில் தடம்மாறும் தமிழ் இளையோர்கள்!

0
56

யாழ்ப்பாணம் – ஒரு காலத்தில் அறிவிற்கும், அறநெறிக்கும், இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் பெயர்பெற்ற மண்.

முப்பதாண்டு காலப் போர்க்கால நெருக்கடிகள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மதுவோ, சிகரெட்டோ இன்றி ஒழுக்கமாக வளர்ந்த ஒரு சமூகம், இன்று சொந்தத் தாயையே கொல்லும் அளவுக்குத் தடம் மாறியிருப்பது ஒட்டுமொத்தத் தமிழினத்தையுமே உலுக்கியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் அவர்கள், தனது சொந்த மகளாலும் மருமகனாலும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் சோகம் மட்டுமல்ல அது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் விழுமியச் சிதைவிற்குச் முக்கியமான சாட்சியாக நிற்கிறது.

இன்றைய இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடையேஅஅஅஅஅஅஅசுயநலப்போக்கே இத்தகைய கொடூரங்களுக்குக் காரணமாக அமைகிறது.

“எனது சுகம், எனது காதல், எனது விருப்பம்” என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொண்ட இன்றைய தலைமுறை, தங்களுக்கு உயிர்கொடுத்த தாயையே ஒரு தடையாகக் கருதும் அளவிற்கு மனச்சாட்சியை இழந்து நிற்கிறது.

முன்பெல்லாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன் “குடும்பத்தின் கௌரவம் என்னவாகும்?”, “அம்மா அப்பா என்ன நினைப்பார்கள்?” என்ற பயமும் மரியாதையும் இருந்தது. ஆனால் இன்று, “எனக்கு இது பிடித்துள்ளது, எனக்கு இது வேண்டும், அதற்குத் தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை” என்ற ஆபத்தான மனநிலை பெருகிவிட்டது.

விரிவுரையாளர் தயாளினியின் மகள், தன் தாயின் உயிரை விட தனது தற்காலிக ‘காதல்’ சுகமே பெரிது என நினைத்தது இந்த உச்சக்கட்ட சுயநலத்தின் வெளிப்பாடு.

அற்ப சுகத்திற்காகத் தாயின் முதுகின் மேல் ஏறி இருந்து கழுத்தை நெரித்துக் கொல்லத் துணிந்த அந்த மகளின் செயல், மனிதநேயம் மரணித்துவிட்டதைக் காட்டுகிறது.

அன்று இருந்த இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகள் இன்று தளர்ந்துவிட்டன. “சுதந்திரம்” என்ற பெயரில் இளையோர் எவ்வித வழிகாட்டலும் இன்றி விடப்பட்டுள்ளனர்.

கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ (Ice) போன்ற கொடிய போதைப்பொருட்களின் பாவனை, மனித மூளையின் சிந்திக்கும் திறனையும் மற்றும் இரக்க உணர்வையும் முற்றாக அழிக்கிறது.

இயல்பான மனித மனது ஒரு உயிருக்குத் தீங்கு செய்ய அஞ்சும். ஆனால், கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருட்கள் மூளையின் ‘மனச்சாட்சி’ (Conscience) பகுதியை செயலிழக்கச் செய்கின்றன.

இந்தச் சம்பவத்தில் அந்த இளைஞன் கஞ்சா அருந்தியிருந்ததும், அந்தப் பெண் போதைக்கு அடிமையானவனுடன் இணைந்திருந்ததும் அவர்களின் இரக்க உணர்வை முழுமையாக அழித்துவிட்டது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதும், கஷ்டப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ நினைப்பதும் இன்றைய பல இளைஞர்களைக் குற்றச் செயல்களில் தள்ளுகிறது.

போதைக்கு அடிமையான ஒருவனுடன் சேர்ந்து வாழத் துடித்த அந்தப் பெண், தன் தாயின் உழைப்பில் வந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து, அதில் ஒரு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டது, இன்றைய இளையோர் உழைப்பின் மதிப்பறியாது பேராசைப் பிடியில் சிக்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது.

இந்தத் தடம்மாற்றத்திற்குத் தவறான இணையப் பயன்பாடும் ஒரு முக்கிய காரணியாகும். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத ‘Instagram மற்றும் Facebook ‘ போன்ற சமூக வலைத்தளங்கள், குற்றவாளிகள் பிள்ளைகளை மூளைச்சலவை செய்யக் களமாகப் பயன்படுகின்றன.

இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மற்றவர்கள் ஆடம்பரமாக வாழ்வதைப் பார்த்து, தானும் அப்படி வாழ வேண்டும் என்ற ஏக்கம் (FOMO – Fear Of Missing Out) இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது.

நிஜ வாழ்க்கையின் கசப்புகளை எதிர்கொள்ளத் தெரியாமல், ஒரு கற்பனை உலகிலேயே வாழ்வதால் உறவுகளின் மேன்மை அவர்களுக்குப் புரிவதில்லை.

விரிவுரையாளர் தனது மகளைப் பாதுகாக்க எடுத்த விவாகரத்து முயற்சி கூட, சமூக வலைத்தள இரகசிய அரட்டைகளால் தோல்வியுற்று, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

இது டிஜிட்டல் உலகில் நம் பிள்ளைகள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

சமூகம் இன்று “தனது வேலை மாத்திரம் போதும்” என்ற சுயநல மனப்பாங்கிற்கு மாறியுள்ளது.
பக்கத்து வீட்டில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மௌனம் காப்பதும், போதைப்பொருள் வியாபாரிகளை அடையாளம் கண்டு ஒதுக்கத் தவறுவதும் இத்தகைய குற்றவாளிகளுக்குத் துணிவைத் தருகிறது.

இதற்கான தீர்வு என்பது வெறும் சட்ட நடவடிக்கைகளில் மட்டும் இல்லை, அது நம் ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களை விட அவர்களின் மனநலத்திற்கும், நண்பர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஒரு வாழ்வியல் பாடமாக மாற வேண்டும்.

கிராமிய மட்டத்தில் கண்காணிப்புக் குழுக்கள் வலுப்படுத்தப்பட்டு, போதைப்பொருள் நடமாட்டம் வேரோடு அறுத்தெறியப்பட வேண்டும்.

இந்தச் சமூகப் பொறுப்பை நாம் தட்டிக்கழித்தால், எஞ்சியிருக்கும் அற விழுமியங்களும் அழிந்து, நம் எதிர்காலத் தலைமுறை அடையாளமற்றுப் போய்விடும் அபாயம் உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினியின் மரணம் ஒரு தனிப்பட்ட மரணம் அல்ல, அது நம் சமூகத்தின் விழுமியங்களுக்கு ஏற்பட்ட மரணம்.

நாம் இப்போதே விழித்துக்கொள்ளாவிட்டால், இன்னும் பல ‘திவாகர்களும்’, தடம் மாறிய ‘மகள்களும்’ நம் வீடுகளிலேயே உருவாவதைத் தடுக்க முடியாது.

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள், நம் மண்ணையும், நம் பிள்ளைகளையும் போதை என்ற அரக்கனிடம் இருந்து மீட்டெடுங்கள்.

நயினை மனோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here